எம்மில் பலரும் செல்வத்தை நாடி வாழ்க்கை முழுவதும் பயணிப்பது தான் வாழ்க்கைக்கான பற்றுக்கோடு என நினைத்திருக்கிறார்கள்.
வேறு சிலர் எம்முடைய எதிர்கால தலைமுறையினர் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான செல்வத்தை சேமிப்பதில் தான் வாழ்க்கையில் வெற்றி அடங்கியிருக்கிறது என்பர். ஆனால் வெகு சிலரே வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும்… பெயரையும், புகழையும் சம்பாதிக்கவில்லை என்றாலும்… ஆயுள் முழுவதும் உழைப்பதற்கான ஆரோக்கியம் அவசியம் தேவை என கருதுகிறார்கள்.
ஆரோக்கியம் என்பதும் முக்கிய செல்வ வளம் என்பது எம்மில் சிலருக்குத்தான் தெரிகிறது. பணம் இருந்தாலும் பலரால் பல விடயங்களை மேற்கொள்ள முடிவதில்லை.
ஏனெனில் அவர்களுடைய உடலும், உடலை சார்ந்த ஆரோக்கியமும் ஒத்துழைப்பதில்லை. இவர்களிடத்தில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி ? என்று விவரித்தால் ஒருமுகமான கவனத்துடன் கேட்டுக் கொள்வார்கள்.
ஆண்களாக இருந்தாலும்.. பெண்களாக இருந்தாலும் .. பிள்ளைகளாக இருந்தாலும்… ஆரோக்கியம் என்பதுதான் அடிப்படை. இந்த ஆரோக்கியம் பலருக்கும் பல தருணங்களில் கெடுகிறது.
இந்தத் தருணத்தில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், சுகவீனம் ஏற்படாமல் இருப்பதற்கும், ஓய்வில்லாமல் உழைப்பதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்த லக்னத்தில் இருந்து நான்காம் பாவம் – அதன் அதிபதி- சாதகமாக இல்லாமல் பாதகமாக இருந்தால்….. ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
குறிப்பாக ஜாதகரின் தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். இதற்கான சிகிச்சைகளை அவர்கள் ஆயுள் முழுவதும் மேற்கொள்ளக்கூடும். பாதிப்பும் நாட்பட்ட பாதிப்பாகவே ஏற்படும்.
இவர்கள் அருகில் இருக்கும் அரசமர விநாயகரோ அல்லது ஆலயத்தில் இருக்கும் விநாயகர் சன்னதியிலோ சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று தேங்காய் எண்ணெயில் வெள்ளெருக்கு திரி இட்ட தீபத்தை ஏற்றி, வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும்.
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று தவறாது வழிபட தொடங்கினால் .. ஆரோக்கிய பாதிப்பு எதுவும் தொடர்ந்து ஏற்படாது.
அத்துடன் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் சிகிச்சை முழுமையாக பலனளிக்கும். சிக்கலான சத்திர சிகிச்சையும் நிறைவான பலனைத் தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.