எம்மில் பலரும் பல்வேறு காரணங்களால் புதிய நிலவியல் பகுதிக்கு இடம்பெயர்ந்து வாடகை வீட்டில் வசிக்க தொடங்குவார்கள். சிலருக்கு சொந்த வீடு கட்டினாலும் அந்த வீட்டில் வாழ்வதற்கான சாத்தியக்கூறு ஏற்படாமல் இருக்கும். வேறு சிலர் வாடகை வீட்டிலிருந்து உழைத்து முன்னேறி சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்திருப்பார்கள். ஆனால் சொந்த வீட்டில் வாழ தொடங்கிய தருணத்திலிருந்து வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் சுகவீனங்கள், ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். வேறு சிலருக்கு சொந்த வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உடலின் வெவ்வேறு உறுப்புகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும். வருகை தந்து கொண்டிருந்த வருவாயில் தடை ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களின் உறவு மேலாண்மையில் விரிசல் ஏற்படும். உடலியல் சார்ந்த பாதிப்பிற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டாலும் எந்த குறைபாடும் இல்லை என வைத்தியர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள். இதுபோன்ற இனம் கண்டறியாத பாதிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அமானுஷ்யமான பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சூட்சம குறிப்புகளையும் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களிலும் மாலை வேளையில் அதாவது ஆறு மணிக்கு பிறகு ஏழு மணிக்குள்ளாக நீங்கள் வசிப்பது வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் சாம்பிராணி புகை போட வேண்டும். இந்த சாம்பிராணியுடன் வேப்பிலை அல்லது வேப்பம்பூவை இட்டு, அதன் புகையை வீடு முழுவதும் பரவ விட வேண்டும். இந்த புகை உங்களது வீட்டில் மறைமுகமாகவோ அல்லது சூட்சுமமாகவோ இருக்கும் எதிர் மறையான ஆற்றலை வெளியேற செய்து சாதகமான நேர் நிலையான ஆற்றலை பரவச் செய்யும்.
அத்துடன் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் அல்லது வரவேற்பு அறையில் அல்லது வீட்டில் வாசலில் இருந்து உள்ளே வந்தவுடன் எதிர் சுவற்றில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மாட்டி வணங்க வேண்டும்.
வேழமும் , வேலனும் இருக்கும் வீட்டில் துர் சக்திகளுக்கு இடமில்லை என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் பொருளாதார ரீதியில் வசதியானவர்கள் சொந்த வீடு இருந்தால் அவர்களுக்கு மேலே சொன்ன பாதிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் தங்களுடைய வளாகத்தில் கிழக்கு திசை நோக்கிய படி வேப்ப மரத்தை பதியமிட்டு வளர்க்கலாம். இவை வளர வளர உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து வளமும் உயரும். உங்களுக்கு வேப்ப மரத்தை பதியமிட்டு பராமரிப்பதற்கு இடமில்லை என்றால் , உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் வேப்ப மரத்திற்கு நாளாந்தம் தண்ணீர் ஊற்றி பராமரித்தாலும் உங்களுக்கான சுப பலன்கள் கிடைக்கும்.