அதிதீவிர பெண்ணியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை; இதை சொல்வதால் என்னை ‘பழைமைவாதி’ என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆம். நான் பழைமைவாதிதான்…” என நறுக்கு தெறித்தாற்போல் கூறினார் தமிழ்நாட்டின் வழக்கறிஞர் சுமதி.
அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து கொழும்பு கம்பன் விழா நிகழ்வுகளில் பங்கெடுத்த வழக்கறிஞர் சுமதி, வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது, “பெண்களை உற்சாகப்படுத்தும்படி நிறைய பேசுகிறீர்கள்… ‘அதிதீவிர பெண்ணியம்’ பேசுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என கேட்டதற்கே இவ்வாறு பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
ஆண்களே செய்வது தவறு என்று நாம் சொல்லக்கூடிய சில செயல்களை, பெண்ணியம் என்ற பெயரில் ‘ஆண்கள் செய்யலாம், நாங்கள் ஏன் செய்யக்கூடாது’ என்று நினைத்தால், அது பெண்ணியமாக இருக்க முடியாது.
எது சரி, எது தவறு என்று பேசுவதானால், அதற்கு எல்லையே இருக்காது.
‘சிகரெட் பிடிக்காதே’, ‘மது அருந்தாதே’, ‘போதைப்பொருள் உட்கொள்ளாதே’, ‘பிறர் மனை நயவாதே’…. உடல் ஆரோக்கியத்துக்கு கேடு. வேறு எதைப் பற்றி யோசிக்காவிட்டாலும் உன் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு, உனக்கு கேடு, சமூக ஆரோக்கியத்துக்கு கேடு, எல்லோருக்கும் கேடு… இவை அடிப்படையாக சொல்லப்படும் விடயங்கள்.
‘இதையெல்லாம் நான் மறுதலிப்பேன்’ என்று சொன்னால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பிறகு? சட்டமின்மைதான் இருக்கும். யாரும், எப்படியும் வாழலாம். கழுதை, பன்றி, நாய் மாதிரிதான் நம் வாழ்க்கை இருக்கும். இதை நான் சுட்டிக்காட்டுவதால், என்னை பழைமைவாதி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் பரவாயில்லை.
ஏனென்றால், சமூக ஒழுங்கென்பது இருக்கவேண்டும். எதிலும் ஒழுங்கில்லாவிட்டால் என்ன சொல்வது? இதை நான் இருபாலினத்தவர்களுக்கும் சொல்கிறேன். ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. எல்லோரும் ஒழுக்கமாக இருங்கள்” என்றார்.