வுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் உத்தரவு
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலை நீடிக்க காரணங்கள் போதாமையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று (05.03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி, சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார்.
அதனை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதிகளால், பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இவை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்

newnitharsanam.com